Breaking News

காஷ்மீர்: லாரியில் மறைந்திருந்த 4 தீவிரவாதிகள்; சுங்கச் சாவடி என்கவுன்டர்! - திக் திக் நிமிடங்கள்

ஸ்ரீநகரை நோக்கி பயணித்த லாரி ஒன்று பான் டோல் பிளாசா அருகே உள்ள சோதனைச் சாவடியில், பாதுகாப்புப் படையினரால் நிறுத்துமாறு அடையாளம் காட்டப்பட்டபோது, ​​நான்கு பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் அவர்களை சுட்டு வீழ்த்தினர்.

கடந்த 2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள லெத்போரா பகுதியில், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பயணித்த வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது அந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.

அதையடுத்து, ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் பதுங்கி தாக்குதல்களை நடத்துவதும், ஜம்முவுக்குள் நுழைவதற்கு பல்வேறு இடங்களில் எல்லையை மீறுவதும் தொடர்கதையாகி வருகிறது. மேலும், ஒரு வாகனத்தை தாக்கிய பின்னர், அவர்கள் ராணுவம் அல்லது போலீஸ் நிலைகள் மீது தற்கொலைப் படைத் தாக்குதல்களை நிகழ்த்துவதும் நடந்து வருகின்றன.

துப்பாக்கிச்சூடு

இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இரண்டு காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர். தீவிரவாதிகள் ஸ்ரீநகருக்கு லாரியில் பயணிக்க முயன்றபோது, நக்ரோட்டா மாவட்டம் பான் டோல் பிளாசா அருகில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீநகர் நோக்கி லாரியில் பயணம் செய்தனர். பயங்கரவாதிகள் பயணித்த லாரியை பான் டோல் பிளாசா அருகில் பாதுகாப்பு படையினர் அடையாளம் கண்டு வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

துப்பாக்கிச்சூடு

பாதுகாப்புப் படையினர் லாரியைச் சோதிக்கத் தொடங்கியபோது, பதுங்கு குழி போன்ற கட்டமைப்பில் மறைந்திருந்த 4 தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், அதில் காவலர்கள் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். அப்போது, பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து, ஜம்மு காவல்துறை அதிகாரி முகேஷ் சிங் கூறுகையில், ``துப்பாக்கிச் சூட்டில் மூன்று முதல் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்கள் பயணித்த லாரி ஓரளவு சேதமடைந்துள்ளது. மேலும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய அப்பகுதி முழுவதும் சோதனை நடந்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு

கடந்த ஜனவரி 31-ம் தேதியன்று காஷ்மீருக்குள் நுழைய முயன்ற மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதையடுத்து இதுபோன்ற சம்பவம் நடப்பது இது இரண்டாவது முறை. புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் குழு மீது தீவிரவாதிகள் நேற்று நடத்திய கையெறி குண்டுத் தாக்குதலில் பொதுமக்கள் 12 பேர் காயமடைந்தனர். புல்வாமாவின் ககாபோரா பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், தீவிரவாதி கையெறி குண்டை இலக்கைத் தவறவிட்டு சாலையில் வீசியதால், பொதுமக்கள் 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.



from Latest News

No comments