Breaking News

"யுவன் சார் படத்துல பாடுறதுக்கு வாய்ப்பு தர்றேன்னு சொல்லிருக்காரு!" - ஆனந்தக் கண்ணீரில் கிரிஷாங்

விஜய் டிவியில் ஒளிபரப்பான `சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8' நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தையும், ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீட்டையும் வென்றிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த கிரிஷாங் (Krishaang). சூப்பர் சிங்கர் பயணம் குறித்து பல விஷயங்களை கிரிஷாங்கிடம் பேசினோம். மழலை மனம் மாறாமல் இயல்பாய் பேசினார்.

கிரிஷாங்

இப்ப ஆறாம் வகுப்பு படிக்கப் போறேன். எனக்கு பாடத் தெரியும் என்பதே ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் தெரிஞ்சது. நான், அம்மா, அப்பா, தம்பி எல்லாரும் கும்பகோணத்துக்கு காரில் போயிட்டு இருந்தோம். அப்ப கார்ல ஒரு பாட்டு பிளே ஆச்சு. அந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததால அதே மாதிரி பாட முயற்சி பண்ணி பாடுனேன். அப்படித்தான் எனக்குள் இருக்கிற திறமையை கண்டு பிடிச்சேன்!

சூப்பர் சிங்கர் ஆடிஷனுக்கு வரும்போது எனக்கு மூணு பாட்டு மட்டும்தான் தெரியும். கொஞ்ச, கொஞ்சமா எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். ஆடியோ வடிவில் தொடர்ந்து பல பாடல்களை கேட்டு முறையா பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சேன். டைட்டில் வின் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றவர் தொடர்ந்து பேசினார்.

கிரிஷாங்

எனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால அதற்கான ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டே பாட்டும் பாடிட்டு இருந்தேன். ஒருமுறை சித்ரா அம்மாவுடைய ரூமிற்கு போயிருந்தேன். அம்மா ஒரு மருந்து கொடுத்தாங்க. அந்த மருந்தை சாப்பிட்ட பிறகு ஃபீலிங் பெட்டரா இருந்துச்சு. எனக்கு பல ஊர்களுக்கு போய் வித்தியாசமான உணவுகளை டேஸ்ட் பண்ண பிடிக்கும் என்றவரிடம் டைட்டில் வின் பண்ணின மொமண்ட் குறித்துக் கேட்கவும் சிரிக்கிறார்.

எனக்கு அந்த மொமென்ட் ரொம்பவே ஸ்பெஷல். டைட்டில் வின் பண்ணிட்டேன்னு சொல்லும்போதுகூட சிரிச்சிட்டு சந்தோஷமாதான் நின்னுட்டு இருந்தேன். அந்த பரிசை யுவன் சார் கொடுத்துட்டு என்கிட்ட நிச்சயம் படத்துல பாடுறதுக்கு வாய்ப்பு கொடுக்கிறதா சொன்ன உடனே எனக்கு அழுகை வந்துடுச்சு!

கிரிஷாங்

எஸ்பிபி சாரை நான் ஞாபகப்படுத்துறேன்னு சரண் சார் அடிக்கடி சொல்லுவார். அதனால தான் `குட்டி டாடி'ன்னு செல்லமா என்னை கூப்பிடுவாரு. அவர் அப்படி சொல்லும்போதெல்லாம் நாம இதுக்கு தகுதியான நபரான்னு என்னை நானே கேட்டுப்பேன்.. இப்ப வரைக்கும் அந்த தகுதி எனக்கு இருக்கான்னு தெரியாது.. ஆனா, நிச்சயம் அவர் மாதிரி ஆக தொடர்ந்து முயற்சி பண்ணுவேன்!' என்றார்.

கிரிஷாங் பல விஷயங்கள் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அத்துடன் விதவிதமான நம் மனதிற்கு நெருக்கமான பாடல்களை அவரது குரலில் நேர்த்தியாக பாடி பிரமிக்க வைத்தார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!



from Latest News

No comments