Breaking News

வேலூர்: `வீடியோவை காட்டி மிரட்டினான்!’ - 6 ஆண்டுகளாக இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள மேல்ஆலத்தூர் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். 50 வயதான இந்த நபர் பேரன், பேத்தி எடுத்துவிட்டார். இந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மனைவியும், அவரது மகளும் குளிப்பதை மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார் யுவராஜ். அந்த வீடியோவைக் காண்பித்து மிரட்டி ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மகளிடம், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் கொடூரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம், தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

யுவராஜ்

பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், பாலியல் கொடூரன் யுவராஜை கைது செய்துள்ளனர்.

தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து புகார் மனுவில் இளம்பெண் கூறியிருப்பதாவது:- ‘‘2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாசம் நான் ஸ்கூல் போயிட்டிருந்தேன். அப்போ, திடீர்னு வந்து யுவராஜ் செல்போனை காட்டி ‘பாரு’னு சொன்னான். அதுல, என்னுடைய அம்மாவும், நானும் குளிக்கிற வீடியோ இருந்துச்சி. ‘நான் சொல்ற மாதிரி கேட்கலைனா, வீடியோக்களை நெட்டில் விட்டிருவேன்’னு மிரட்டினான்.

‘வீடியோவையெல்லாம் டெலிட் பண்ணுங்க, நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்’னு சொன்னேன். அவனும், வேலூர் பக்கத்துல இருக்கிற ஓட்டேரி பகுதிக்கு என்னை கூட்டிகிட்டுப் போனான். அங்க என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செஞ்சான். அதுக்கு அப்புறம் குளிக்கிற வீடியோவை டெலிட் பண்ணிருவான்னு நெனச்சேன். ஆனா, என்னை வன்கொடுமை செய்யிற வீடியோவையும் ரகசியமா எடுத்து தொடர்ந்து என்னை சித்ரவதை செஞ்சான். ‘வெளியில யார்கிட்டயாவது சொன்னா, மொத்த வீடியோவையும் நெட்டில் விட்டிருவேன். குடும்பத்தையே வெட்டி போட்டிருவேன்’னு தொடர்ந்து மிரட்டுனான்.

யுவராஜ்

என்னுடைய வீட்டுக்கே வந்து அப்பா, அம்மாவையும் மிரட்ட ஆரம்பிச்சான். அதுமட்டுமில்லாம, மாசம் 10,000 ரூபாய் மிரட்டி வாங்கிட்டு இருந்தான். அப்பாவும் பயந்துகிட்டு காசு கொடுத்துகிட்டு இருந்தாரு. இப்ப நான் சென்னையில நர்ஸா இருக்கிறேன். சென்னைக்கு வந்தும் தொந்தரவு செய்யுறான். அப்பாவையும், அம்மாவையும் அடிக்கிறான். வீட்டுல இருக்கிற பொருட்களையும் உடைக்கிறான். கடந்த 2015-வது வருஷம், என்னை சித்தூர் அழைச்சிக்கிட்டு போய் கட்டாயப்படுத்தி தாலி கட்டிட்டான். அந்த தாலியை நான் தூக்கியெறிஞ்சிட்டேன். இப்போ, ‘முகத்துல ஆசிட் அடிக்கப் போறேன்’னு மிரட்டுறான்’’ என்று கூறியிருந்தார் அந்தப் பெண்.

விசாரணையில், இளம்பெண்ணின் குற்றச்சாட்டுகள் உண்மையென எனத் தெரியவந்ததையடுத்து, யுவராஜ் மீது நான்குப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், அவரை நேற்றிரவு சிறையில் அடைத்தனர்.



from Latest News

No comments