Breaking News

சென்னை: மகள் கண்முன் தாய் கொலை; குழந்தையுடன் தப்பிய கணவர் - பதறவைக்கும் சிறுமியின் வீடியோ!

சென்னையை அடுத்த ஆவடி கன்னபாளையம், மேல்பாக்கம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் மதன் (45). இவரின் மனைவி சரிதா (39). இந்தத் தம்பதியருக்கு ஏழு மாத பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நேற்று மதியம் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மதன், இரும்பு பைப்பால் சரிதாவைத் தாக்கியிருக்கிறார். அதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சரிதா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மதன், ஏழு மாத பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

சரிதா

சரிதா கொலை செய்யப்பட்ட தகவல் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது. இதையடுத்து ஆவடி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் சரிதாவின் சடலத்தைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். தப்பிச் சென்ற மதனைப் பிடித்த போலீஸார் அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: சென்னை: `அவனைக் கொலை செய்' - காதலியின் ஆசையை நிறைவேற்ற சிறைக்குச் சென்ற இளைஞர்!

இது குறித்து ஆவடி போலீஸார் கூறுகையில், ``சரிதாவுக்கு ஏற்கெனவே சுரேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. சுரேஷ் மூலம் சரிதாவுக்கு ஏழு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. சுரேஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து சரிதா, மகளுடன் தனியாக வசித்துவந்தார். அப்போதுதான் மதனுடன் சரிதாவுக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மதனுக்கு திருமணமாகி மகள் இருக்கிறார். அதனால் சரிதாவை 2-வதாக மதன் திருமணம் செய்து குடும்பம் நடத்திவந்தார். சரிதாவுக்கும் மதனுக்கும் ஏழு மாத பெண் குழந்தை இருக்கிறது.

கறிக்கடை

திருமணத்துக்கு முன்பு வரை சரிதா வேலை பார்த்துவந்தார். அதன் பிறகு சரிதாவை வேலைக்குச் செல்ல மதன் அனுமதிக்கவில்லை. அதனால் வீட்டிலேயே சரிதா குழந்தைகளைக் கவனித்துவந்தார். இந்தச் சூழலில் மதனுடன் அவரின் மூத்த மனைவியின் மகள் போனில் பேசியதாகக் கூறப்படுகிறது. அதனால் மதனுக்கும் சரிதாவுக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. கறிக்கடை நடத்திவரும் மதன், ஆத்திரத்தில் இரும்பு பைப்பால் சரிதாவின் தலையில் தாக்கியிருக்கிறார். அப்போது சரிதாவின் மூத்த மகளான 7 வயது சிறுமி அங்கு இருந்திருக்கிறார். அந்தச் சிறுமியின் கண் எதிரிலேயே சரிதாவை அடித்துக் கொலை செய்த மதன், தனக்கு பிறந்த ஏழு மாத குழந்தையுடன் சென்றுவிட்டார். ரத்த வெள்ளத்தில் சரிதா உயிருக்குப் போராடியதைப் பார்த்த 7 வயதான சிறுமி, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்டிருக்கிறார். ஆனால் உடனடியாக யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. அதன் பிறகு சிறுமி வீட்டுக்கு வந்தபோது சரிதா சடலமாகக் கிடந்திருக்கிறார். இந்தச் சம்பவத்தில் மதனைக் கைதுசெய்திருக்கிறோம். சரிதாவின் குழந்தைகளை அவரின் உறவினர்களிடம் ஒப்படைத்திருக்கிறோம்" என்றனர்.

மனதைப் பதறவைக்கும் வீடியோ

சரிதாவின் மூத்த மகளான 7 வயது சிறுமி, போலீஸாரிடம் என்ன நடந்தது என்பதை விரிவாகக் கூறுகிறார். அதை போலீஸார் வீடியோவாக எடுத்திருக்கின்றனர். அந்த வீடியோவில், ``சம்பவம் நடந்தபோது நான் வீட்டுக்குள்தான் இருந்தேன். நான் வேணாம், வேணாம் என்று சொன்னேன். ஆனால் அடிச்சுக்கிட்டே இருந்தாரு. பக்கத்தில உள்ளவர்களிடம் போய் சொன்னேன். ஆனா யாருமே ஹெல்ப்புக்கு வரலை. ஐந்து தடவை இரும்பு பைப்பால அடிச்சாரு. அதுக்குப் பிறகு பாப்பாவைத் தூக்கிட்டுப் போயிட்டாரு.

சடலமாக சரிதா

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்ன பிரச்னைன்னு தெரியலை. அப்பாவோட பொண்ணு போன்ல பேசிச்சு. அதனால போன்ல பேசக் கூடாதுன்னு அம்மா சொல்லிச்சு. இன்னிக்கு அம்மா வேலைக்கு போறதா சொல்லிச்சு. உடனே அப்பா வேணாம் என்று சொன்னாரு. ஞாயிற்றுக்கிழமை போன்னு சொன்னாரு. அதனாலதான் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்துச்சு. தலையிலேயே அடிச்சதாலே ரத்தம் ஊத்திச்சு. தெருவுல போய் ஹெல்ப் கேட்டேன். ஆனா யாருமே ஹெல்ப் பண்ணலை" எனக் கண்ணீருடன் சிறுமி கூறியிருக்கிறார். சிறுமியின் சாட்சிதான் இந்த வழக்கின் முக்கிய ஆதாரம் என்கின்றனர் ஆவடி போலீஸார்.



from Latest News

No comments