Breaking News

`காத்துவாக்குல ரெண்டு காதல்' - காதலிகள் இருவரையும் ஒரே நேரத்தில் கரம்பிடித்த இளைஞர்!

ஜார்கண்ட் மாநிலம் லோஹர்டகாவில் உள்ள பந்தா கிராமத்தில் வசித்து வருபவர் சந்தீப் ஓரான். இவரும் குசும் லக்ரா என்ற பெண்ணும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், சந்தீப் மேற்கு வங்கத்துக்கு செங்கல் சூளையில் வேலை செய்வதற்கு சென்றுள்ளார்.

அங்கு ஏற்கெனவே வேலை செய்துக்கொண்டிருக்கும் ஸ்வாதி குமாரி என்ற பெண்ணுடன் நட்பு ரீதியாக பழகிவந்துள்ளார். ஆனால் காலப்போக்கில் அது காதலாக மலர்ந்துள்ளது. அங்கு ஸ்வாதி குமாரியுடன் தங்கியிருந்துள்ளார். இந்த விவகாரம் பந்தா கிராமவாசிகளுக்கு தெரிய வந்துள்ளது. அதனால் கிராமத்தில் சந்தீப் ஓரானுக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ஆனாலும், ஸ்வாதி குமாரியை கிராமத்துக்கு அழைத்து வந்துள்ளார்.

சந்தீப் ஓரான் - குசும் லக்ரா- ஸ்வாதி குமாரி திருமணம்

தொடர் சண்டைக்குப் பிறகு, கிராம மக்கள் பஞ்சாயத்து செய்து, சந்தீப் ஓரானை இரு பெண்களுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். சந்தீப் ஓரானுக்கு ஏற்கெனவே திருமணமாகாமல் குழந்தை இருக்கிறது என்பதை அறிந்தும் ஸ்வாதி ஓரானை ஏற்றுக்கொண்டார். முதல் காதலி குசும் லக்ராவும் இவர்களின் காதலை ஏற்றுக்கொண்டார். மேலும், கிராம மக்களின் முன்னிலையில் இரண்டு பெண்களின் சம்மதத்துடன் சந்தீப் ஓரான் திருமணம் செய்துக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, தனியார் செய்தி நிறுவனத்துக்கு சந்தீப் ஓரான் பேட்டியளித்த போது, "இரண்டு பெண்களை ஒன்றாக திருமணம் செய்து கொள்வதில் சட்ட சிக்கல் இருக்கலாம், ஆனால் நான் இருவரையும் நேசிக்கிறேன், அவர்களில் யாரையும் விட்டுவிட முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.



from Latest News

No comments