Breaking News

மனைவிக்கு தெரியாமல் காதலியைச் சந்திக்க மாலத்தீவு பயணம்; மறைக்க பாஸ்போர்டை கிழித்ததால் சிக்கிய நபர்!

மும்பையைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றி வருபவர் சதிஷ் ஷிண்டே(32). இவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்ட நிலையில், மாலத்தீவில் ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். அவரை சென்று பார்க்க விரும்பிய சதீஷ், தன் மனைவியிடம் கம்பெனி வேலையாக வெளிநாடு செல்லவேண்டியிருக்கிறது என்று கூறிவிட்டு... மாலத்தீவுக்குச் சென்றார். அவர் சென்ற சில நாள்களில் அவர் மனைவி அடிக்கடி போன் செய்து பார்த்திருக்கிறார். ஆனால், சதீஷ் போனை எடுத்து பேசவே இல்லை. அதோடு வாட்ஸ்அப்பிலும் கால் செய்து பார்த்திருக்கிறார், அதையும் எடுக்கவில்லை. இதனால் அவர் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. மனைவி தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்ததால், சதீஷ் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு இந்தியா திரும்ப முடிவு செய்தார். மாலத்தீவு சென்றது தன் மனைவிக்கு தெரிந்துவிடும் என்று கருதி விமானத்தில் ஏறியவுடன் பாஸ்போர்ட்டிலிருந்து சில பக்கங்களை கிழித்து எடுத்துவிட்டார்.

பாஸ்போர்ட்

மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது அதிகாரிகள் பாஸ்போர்ட்டை பார்த்தபோது, அதில் 3-6 மற்றும் 31-34 வரையிலான பக்கங்களைக் காணவில்லை. உடனே அவரிடம் அதிகாரிகள் விசாரணைநடத்திய போதுதான், மாலத்தீவு சென்றதை தன் மனைவியிடமிருந்து மறைப்பதற்காக அந்த பக்கங்களை கிழித்து எடுத்துவிட்டதாகத் தெரிவித்தார். உடனே அவரை அதிகாரிகள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்திய சட்டப்படி பாஸ்போர்ட்டை கிழிப்பது குற்றமாகும். ஆனால் பாஸ்போர்ட் பக்கங்களை கிழிப்பது குற்றம் என்று தனக்கு தெரியாது என்று சதீஷ் தெரிவித்தார். ஆனாலும் சட்டப்படி குற்றம் என்பதால் அவரை போலீஸார் கைதுசெய்தனர். மனைவியிடமிருந்து உண்மையை மறைக்க பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்து சதீஷ் தானே சென்று மாட்டிக்கொண்டார்.



from Latest News

No comments