Breaking News

`22 -ம் தேதி விஜயகாந்த் -க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது!’ - மியாட் மருத்துவமனை

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் கட்சி பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வதில்லை. தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்த அவருக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்த நிலையில் தேமுதிக சார்பில், விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், ``வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக கேப்டன் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற கேப்டன் விஜயகாந்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் விஜயகாந்த் உள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: `லேசான கொரோனா அறிகுறி; சரி செய்யப்பட்டு விட்டது!’ - விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக

இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலைக் குறித்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 22 -ம் தேதி விஜயகாந்த் -க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும், அவரது உடல்நிலை சீராக உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் பிரித்வி மோகன்தாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை அறிக்கை

தே.மு.தி.க தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது என்றும் அது உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் விஜயகாந்த் -க்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளது குறிப்பிடதக்கது.



from Latest News

No comments