Breaking News

ராமநாதபுரம்: கட்டுப்பாடற்ற வேகம்; நேருக்குநேர் மோதிக்கொண்ட டூவீலர்கள்! 4 பேரைப் பலிகொண்ட விபத்து

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே நேற்றிரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 3 இளைஞர்கள் உள்ளிட்ட 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் அருகே நடந்த விபதில் காயமடைந்தவர்.

ராமநாதபுரம் மாவட்டம் கருங்குடியைச் சேர்ந்தவர் பாண்டிதுரை. இவரது நண்பர் உதயகுமார். இவர்கள் இருவரும் திருநெல்வேலியில் ஓட்டுநராக வேலைபார்த்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு டூவீலர் ஒன்றில் உப்பூர் சத்திரத்திற்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்திசையில் இருந்து வந்து கொண்டிருந்த கார் ஒன்றினை முந்திக்கொண்டு மற்றொரு டூவீலர் வேகமாக வந்துள்ளது.

Also Read: சீர்காழி : டூவிலரில் ஆடு திருடி வந்தபோது விபத்து! - ஒருவர் பலி; இருவர் படுகாயம்

கண் இமைக்கும் நேரத்தில் அந்த டூவீலர் எதிரே வந்த பாண்டித்துரையின் டூவீலர் மீது மோதிய நிலையில் அருகே சென்ற காரின் பக்கவாட்டிலும் மோதியது. இதில், இரண்டு டூவீலர்களில் சென்றவர்களும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதனால், பலத்த காயம் அடைந்த தேவகோட்டை கைலாசநாதபுரத்தை சேர்ந்த வல்லரசு (19), ஹரிஹரன் (19) மற்றும் கருங்குடியைச் சேர்ந்த பாண்டித்துரை (32) ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் பலியானவர்

விபத்தினைக் கண்ட அப்பகுதியில் சென்றவர்கள், காயமடைந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அத்தானூர் கிராமத்தை சேர்ந்த உதயக்குமார் மற்றும் சென்னையைச் சேர்ந்த தேவகெளதம் (19) ஆகியோரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவகெளதமும் உயிரிழந்தார். உதயக்குமார் மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

விபத்தில் பலியானவர்

விபத்தில் உயிரிழந்த கருங்குடி கிராமத்தைச் சேர்ந்த பாண்டித்துரைக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இளைஞர்களின் கட்டுப்பாடற்ற வேகத்தினால் 4 உயிர்கள் பலியான இந்தக் கோர விபத்து குறித்து திருப்பாலைக்குடி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



from Latest News

No comments