Breaking News

பழநி துப்பாக்கிச்சூடு: காயமடைந்த ஒருவர் உயிரிழப்பு! தியேட்டர் ஓனர் மீது கொலை வழக்கு

திண்டுக்கல் மாவட்டம், பழநி நகரிலுள்ள அப்பர் தெருவில் 12 சென்ட் காலியிடம் உள்ளது. அதை பழநி அருகேயுள்ள அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் (வயது 62) விலைக்கு வாங்கியிருக்கிறார். காலியிடத்தின் அருகே வசித்துவரும் பிரபல திரையரங்க உரிமையாளர் நடராஜ் (வயது 80), அந்த இடம் தன்னுடையது எனக் கூறியிருக்கிறார். இதை ஏற்க மறுத்த இளங்கோவனுக்கும் நடராஜுக்கும் பல மாதங்களாகப் பிரச்னை நீடித்துவந்திருக்கிறது.

மருத்துவமனையில் சுப்பிரமணியம்

இந்தநிலையில், நேற்று காலை, தனது உறவினர்களான பழனிச்சாமி (வயது74), சுப்பிரமணியம் (வயது57) மற்றும் சிலரை அழைத்துக்கொண்டு வந்த இளங்கோவன், அந்த காலியிடத்தில் வேலி அமைக்க முயன்றிருக்கிறார்.

Also Read: வாக்குவாதம்.. துப்பாக்கி.. வீடியோவில் பதிவான கொலை! - உ.பி அரசியல் பிரமுகர், மகனுக்கு நேர்ந்த கொடூரம்

இதை அறிந்த நடராஜ், வேலி அமைக்க முயன்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென தான் எடுத்து வந்திருந்த கைத்துப்பாக்கியால், பழனிச்சாமியின் காலிலும், சுப்பிரமணியத்தின் வயிற்றிலும் சுட்டார். அக்கம்பக்கத்தினர், நடராஜைப் பிடிக்க முயல, அவர் அங்கிருந்து ஓடித் தப்பினார். காயமடைந்த இருவரும் பழநி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட நடராஜ்

காயம்பட்ட பழனிச்சாமியின் காலிலிருந்து தோட்டா அகற்றப்பட்டது. ஆனால், சுப்பிரமணியத்தின் வயிற்றிலிருந்த தோட்டாவை அகற்ற முடியாததால், மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கே சிகிச்சையிலிருந்த சுப்பிரமணியம், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மேலும், காலில் காயமடைந்த பழனிச்சாமியும், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்.

நடராஜின் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள்.

Also Read: `மூட்டுவலி மருந்து; துப்பாக்கி; மயில் வேட்டை!' -கேரள வனத்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த மூவர் கும்பல்

இந்தச் சம்பவத்தை அடுத்து, நடராஜ் மீது கொலை முயற்சி உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பழநி காவல்துறையினர், அவரைக் கைதுசெய்து, நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நிலக்கோட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.

தற்போது சுப்பிரமணியம் இறந்தநிலையில், நடராஜ் மீது கொலை வழக்கு பதியப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சுப்பிரமணியம்.

Also Read: நீலகிரி: யானையைத் தொடர்ந்து சிறுத்தை..! - கூடலூரில் தலைதூக்கும் துப்பாக்கி கலாசாரம்?

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறும்போது,``நடராஜிடம் இருந்த கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டு முதல் கைத்துப்பாக்கிக்கான உரிமம் முடிவடைந்திருக்கிறது. அதைப் புதுப்பிக்க அவர் விண்ணப்பித்திருக்கிறார். இந்தநிலையில்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது” என்றனர்.



from Latest News

No comments