"டிக்கெட் பணத்தைத் திருப்பி தாங்க!"- Vistara விமான நிறுவனத்திடம் பயணிகள் கோரிக்கை; காரணம் இதுதான்!
நாடெங்கும் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் பேரிடர் கட்டுப்பாடுகள், கொரோனா பாதிப்புகள் உள்ளிட்டவற்றால் விமானங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தேவையின் பொருட்டு சில விமான நிறுவனங்கள் தங்களுடைய அட்டவணையிடப்பட்ட பயணங்களை ரத்து செய்து வருகின்றன. Vistara விமான நிறுவனம், பிப்ரவரி மாதம் இயக்கப்படவிருந்த தங்களின் விமானங்களை சில நாள்களாக ரத்து செய்து வருகின்றது. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்கள் இணையத்தில் தங்களுடைய சிரமங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
ISRO விஞ்ஞானியான Shibashis Prusti தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "Vistara விமானத்தில் பிப்ரவரி 5, டெல்லியில் இருந்து புவனேஸ்வர் செல்லவிருந்த என்னுடைய டிக்கெட்டை ரத்து செய்துள்ளீர்கள். கஸ்டமர் கேர் எண்ணுக்குக் கூப்பிட்டாலும் 48 மணிநேரத்திற்கு மேலாக எந்த பதிலும் இல்லை. என்னுடைய முழு பணத்தையும் விரைந்து தாருங்கள்" எனக் கேட்டிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து குறைகள் வந்த வண்ணம் இருக்கவே Vistara சார்பில் அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், "குறைந்து வரும் டிமாண்ட்டின் பொருட்டு கடுமையான சரிவை சந்தித்து வருகிறோம். இருப்பினும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்குச் சலுகையாக அவர்கள் புக் செய்திருந்த பயண தேதியை எந்தவித கட்டணமும் இன்றி மாற்றிக் கொள்ள மார்ச் 31 வரை அனுமதித்துள்ளோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.
Indigo தன்னுடைய விமான பயணங்களை 20 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. AirIndia தேவையின் பொருட்டு பயணச் சுற்றுகளை குறைக்கும் முடிவில் இருக்கிறது. இந்த கொரோனா அலையில் விமான சேவைத் துறை கடுமையான சரிவைச் சந்தித்து கொண்டிருக்கிறது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
from Latest News
No comments