Breaking News

`காஷ்மீருக்குள் சீனா வந்தால் கூட, பரவாயில்லை!’ - பரூக் அப்துல்லா கருத்தால் சர்ச்சை

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு கடந்து விட்டது. மத்திய அரசின் இந்த முடிவு காரணமாக அசம்பாவித சம்பவங்கள் நடக்கலாம் என்பதால், ஜம்மு காஷ்மீர் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பல்வேறு கட்சி தலைவர்கள் சிறைவைக்கப்பட்டனர். தற்போது கட்டுப்பாடுகளில் தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

ஜம்மு காஷ்மீர்

இந்நிலையில் தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்த முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர், ``மத்திய அரசு, காஷ்மீரில் வசிக்கும் மக்களிடம் போய் கேட்கட்டும். அவர்கள் தங்களை இந்தியர்களாக கருதவில்லை. இந்திய அரசின் மீது கடும் விரக்தியில் இருக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். ஆனால், ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். காஷ்மீர் மக்கள் தங்களை பாகிஸ்தானியர்கள் என்றும் நினைக்கவில்லை” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானை தேர்வு செய்ய வில்லை. மாறாக காந்தி வழியில் இணைய விரும்பினார்கள். அதனால் தான் இந்தியாவுடன் இணைந்தனர். அவர்கள் காந்தியின் இந்தியாவை தான் தேர்ந்தெடுத்தனர். மோடியின் இந்தியாவை அல்ல.

தற்போதைய சூழலில், சீனா காஷ்மீருக்குள் வந்தால் கூட, பராவாயில்லை என்ற மனநிலை மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. சீனாவில் இஸ்லாமியர்களுக்கு என்ன நடக்கிறது என இங்குள்ள மக்கள் அறிவர். ஆனாலும் தற்போது இருக்கும் சூழலுக்கு சீனா கூட காஷ்மீருக்குள் வந்தால் பராவாயில்லை என்ற மனநிலையில் தான் காஷ்மீர் மக்கள் உள்ளனர்” என்றார்.

ஃபருக் அப்துல்லா

பரூக் அப்துல்லாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே பரூக் அப்துல்லாவின் காஷ்மீர் மக்கள் குறித்த கருத்து கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. `யாருக்கு இந்த நாட்டின் உணர்வு இல்லையோ, அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறலாம். மற்ற மக்களையும் சேர்ந்த்து பேச வேண்டாம்’ , `பரூக் எப்போது சீனா குடியுரிமை பெற்றார்’ உள்ளிட்ட பல கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்!



from Latest News

No comments